Tuesday, May 6, 2008

நேற்று முன்தினம் என் நண்பர் விஜய் ரசிகர் "குருவி" படத்திற்கு முன்பதிவு செய்கிறேன் நீங்கள் வருகிறீர்களா? என்ற கேட்ட போது, நான் சிங்கப்பூர் வந்து 8 மாதங்களாகியும் இன்னும் இங்கு தமிழ் படம் திரை அரங்கு சென்று பார்க்கவில்லை, தசாவதாரம் தான் முதல் படமாக பார்க்க வேண்டும் என்று முடிவோடு இருந்தேன், ஆனால் படம் பொங்கலுக்கே வருவதாக கூறி இன்னும் வெளியீட்டு தேதி அறிவிக்காததால் இதை நம்பி இருக்க முடியாது என்று கேட்டவுடன் சரி என்று கூறி விட்டேன்.

இன்று
யிஷுன் கோல்டன் வில்லேஜ் திரை அரங்கில் 10 வெள்ளி மதிப்புள்ள அனுமதி சீட்டுடன் முன்பே சென்று விட்டோம். அமர்ந்து இருந்தவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்பதால் நம்ம ஊரில் பார்க்கும் உணர்வே இருந்தது.

பின்னால்
அமர்ந்து இருந்த குழுவினர் படம் ஆரம்பித்தவுடன் விசில் அடித்து அதிர வைத்துக்கொண்டு இருந்தார்கள். சரி விஜயின் தீவிர ரசிகர்கள் போல் உள்ளது இன்று படம் பார்த்த மாதிரி தான் என்று நினைத்து நொந்து பார்க்க ஆரம்பித்தேன். பின்னர் தான் தெரிந்தது விஜயை கிண்டல் செய்யவே அப்படி கத்தினார்கள் என்று.

கதை
என்னவென்றால் விஜயின் அப்பா மணிவண்ணன் ஆந்த்ரா மாநிலத்தில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் கல் உடைக்கும் போது அதில் வைரம் இருப்பதை கண்டு அரசுக்கு சொல்ல முயற்சிக்க அதை வில்லன் கும்பல் சுமன் ஆஷிஷ் வித்யார்தி அவர்களை அடிமையாக்கி வெளியுலகிற்கு தெரியாமல் அடைத்து வைத்து அவர்களை வேலை வாங்குகிறார்கள், அதோடு அந்த வைரத்தை விற்று கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் இதை விஜய் எப்படி கண்டுபிடித்து மனிவண்ணனையும் அவரோடு அடிமைகளாக இருப்பவர்களையும் மீட்கிறார் என்பதே கதை.

எனக்கு
இந்த படத்தின் பாடல் "டண்டனக்க டர்ணா" கேட்டவுடன் நினைவுக்கு வந்தது நம்ம தலைவர் "பாபா" பட பாடல் "புர்ர்ர்ர்ர்ர்ர் பாபா சினிமா சினிமா தான், அதில் இந்த பாடல் வந்த போதே பலரும் கிண்டல் செய்ய படமும் அதற்கு தகுந்த மாதிரி மொக்கயாய் இருக்க படம் ஊத்திக்கொண்டது, எனக்கு இப்போது இந்த பாடலை கேட்டதும் சரி இந்த படமும் என்னவோ ஆக போகிறது என்று எனக்கு தோன்றியது, அதே போல படமும் சொதப்பி விட்டது. என்னடா இது இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள முடிவ சொல்றான்னு பார்க்கறிங்களா? உங்களை ஏமாற்ற வேண்டாம் என்றே முன்னரே கூறி விட்டேன் மற்றும் எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் விஜயின் மீது கிடையாது, ஒரே மாதிரி நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதை தவிர்த்து.

எடுத்தவுடன்
கார் பந்தயம் போன்ற காட்சி, அனைவரும் காரில் இருந்து விஜய் வரப்போகிறார் என்று விசில் அடித்து உற்சாகமாக இருக்க, வெளியே வருவது விவேக், ரசிகர்கள் ஏமாற்றமாக, வந்த விவேக் விஜய் வருவதை பற்றி ஒரு பில்ட் அப் கொடுக்க, விஜய் வேறு இடத்தில், மூடி இருந்த தொட்டி விலகி அதில் இருந்து விஜய் தண்ணீருடன் பீச்சியடிக்க மேலே வருகிறார், யாருமே அதை ஒரு பரபரப்புடன் எதிர்பார்க்காததால் அவருடைய தொடக்க காட்சி சப்பென்று அமைந்த விட்டது. அதற்கு விவேக் அறிமுக காட்சியே சிறப்பாக இருந்தது. விஜயின் அறிமுக காட்சி இவ்வளவு சப்பென்று வந்ததை நீண்ட படங்களுக்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்.

பிறகு
விஜய் தன்னுடைய ஓட்டை காருடன் (கிண்டல் செய்யவில்லை உண்மையிலேயே டப்பா கார் தான்) போட்டியில் கலந்து கொள்கிறார். அனைத்து கார்களும் கலக்கலாக இருக்க விஜயின் கார் மட்டும் காயலான் கடை கார் மாதிரி இருக்கிறது, அனைவரும் அதை கிண்டல் செய்ய விஜய் மௌனமாக அஜித் மாதிரி போட்டி உடையில் போஸ் கொடுக்கிறார் (அஜித்தை மனதில் வைத்து தான் என்று நினைக்கிறேன்) பின்னர் போட்டி ஆரம்பமாகி கார்கள் ஓட துவங்குகின்றன விஜயின் கார் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று கொள்ள, விடாமல் காரை ஓட்டுகிறார், பேனட்,கதவு,பம்பர் என்று எல்லாமே கழண்டு விடுகிறது, கடைசியில் விசை மிதியும் உடைந்து போக அனைவரும் சிரிக்கிறார்கள், உடனே விஜய் அறுந்து போன கேபிளை வாயில் கடித்து இழுத்து வேகத்தை கூட்டி பறந்து சென்று (உணமையாகவே) முதலிடம் பிடிக்கிறார். பின்னர் போட்டியில கலந்துக்கிறது முக்கியம் இல்ல யாரு ஜெயிக்கறாங்க என்பது தான் முக்கியம் என்று யாருக்கோ சவால் விடுகிறார்.

அப்பாவின்
பணத்தை வாங்க மலேசியா செல்லும் விஜய் சுமனின் தங்கை த்ரிஷாவை சந்திக்கிறார் புதுவருட நேரத்தில் கண்ணை கட்டிக்கொண்டு Mask of Zorro போல . முதல் பாதியில் விஜய் ஒரு ஸ்பைடர் மேன் ஆகவே இருக்கிறார், பாதி நேரம் பறந்து கொண்டே இருக்கிறார், த்ரிஷா கீழே விழும் போது ரொம்ப ரொம்ப உயரமான கட்டிடம் பறந்து சென்று பிடித்து கயிறு மூலம் காப்பாற்றுகிறார் ஆனாலும் திரிஷா தண்ணீரில் விழுந்து விடுகிறார், விஜய் கண்ணை கட்டி கொண்டு இருந்ததால் அவரை கண்டு பிடிக்க சென்னை வருகிறார். அவருக்கு வேலை விஜய் யை துரத்துவது மட்டுமே. த்ரிஷா அழகாக இருக்கிறார், இந்த படத்தில் இடுப்பு சுளுக்கு ஏற்பட்டு அதற்கு எண்ணை தடவும் இடத்தில் என்னை போல் ரசிகர்களை கிறங்கடித்து கிளுகிளுப்பு மூட்டுகிறார். என்னமோ போங்க! என் மனசு என்கிட்டே இல்ல எனக்கு படத்தில் இந்த காட்சி மட்டுமே திருப்தி ஆனது விஜய் ரசிகர்கள் மன்னிக்க.

படத்தில்
அனைவரும் விஜயை மாறி மாறி சுடுகிறார்கள் ஆனால் வேகமாக வரும் துப்பாக்கி குண்டை விட வேகமாக ஒதுங்கி தப்பித்துக்கொள்கிறார். சில குண்டுகள் அவரை தவிர மற்ற இடங்களில் துளைக்கிறது.

இவை
எல்லாவற்றையும் விட கொடுமை ரசிகர்களே நொந்து போனது இந்த காட்சி தான், விஜயை வில்லன்கள் துரத்தி வர அவர் ஓடி ஓடி மொட்டை மாடிக்கே வந்து விடுவார் அதற்கு பிறகு ஓட முடியாது வில்லன்கள் வேறு வந்து விடுவார்கள், தப்பிக்க என்ன வழி என்று பார்ப்பார் நமக்கு ஒன்றும் வழியில்லை என்று தோன்றுகிறது, விஜய் மேலே பருந்தை பார்க்கிறார் அல்லது கடவுளை பார்க்கிறாரா என்று சரியாக தெரியவில்லை, எதோ ஏடாகூடமாக நடக்க போகிறது என்று பார்த்தால் விஜய் அங்கே மாடியில் இருந்து தாவி சம்பந்தமே இல்லாத தூரத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் பாலத்திற்கு பறந்து தாவி பிடித்துக்கொள்கிறார். வில்லன்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். பின்னர் அதோடு நிற்காமல் பாலத்திலேயே ரயிலுக்கு இணையாக ஓடி ரயிலை பிடித்து ஏறி, அங்கே இருந்து வில்லன்களை பார்த்து விரலால் சுடுகிறார் அதோடு இடைவேளை. இப்படி ஒரு இடத்திலா இடைவேளை போட வேண்டும், அனைவரும் கிண்டல் செய்ய வசதியாக போய் விட்டது முன் வரிசையில் இருந்தவர் நான் கூட நேரா ரயிலுக்கு உள்ளேயே தாவி விடுவார் என்று நினைத்தேன் என்று கிண்டல் செய்ய அனைவரும் சிரித்து விட்டார்கள்.

இடைவேளை
வரை, படத்தை ஓரளவிற்காவது காப்பாற்றுவது விவேக் தான், இல்லை என்றால் ரொம்ப கடுப்பாகி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இடைவேளைக்கு
பிறகு முழுவதும் ஆந்த்ரா கடப்பாவில் நடப்பதையே காட்டுகிறார்கள்,நமக்கும் வறண்ட இடத்தையே பார்த்து சலிப்பாகி விடுகிறது. இடையில் த்ரிஷா பாடலில் வந்து ஜில் சேர்க்கிறார். இதில் பலானது மற்றும் மொழு மொழுன்னு யம்மா யம்மா பாடலும் என்னவோ போல் உள்ளது கேட்க, விஜய் தனக்கு பெண் ரசிகைகளும் குழந்தை ரசிகர்களும் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதிரி பாடல் வரிகளை தவிர்க்க வேண்டும். மொழு மொழுன்னு யம்மா யம்மா பாடலின் போது ஒருத்தர் ஏடா கூடமாக கிண்டல் செய்தார். த்ரிஷாவும் பாடலுக்கு தகுந்த மாதிரி இருக்கிறார் அழகாக.

படையப்பாவில்
ரஜினி மேலாடை இல்லாமல் சண்டை போடுவார் அப்போது அப்பாஸ் 'What a man" என்று சொல்வார், அதை பார்த்தே அனைவரும் தலைவரை கிண்டல் செய்தார்கள், இதில் விஜயும் அப்படி ஒரு போஸ் கொடுக்கிறார், நல்ல வேளை பனியனுடன்.

இடைவேளைக்கு
பிறகு விவேக் இல்லை, படமும் வறட்சியாக போகிறது, திரிஷாவை தவிர்த்து. விஜய் வழக்கம் போல ஆட்டத்தில் பட்டய கிளப்புகிறார். நளினமான மற்றும் வேக ஆட்டத்தில் நான் தான் ராஜா என்பதை கூறாமல் ஆட்டத்தில் காட்டுகிறார். கடைசியில் அனைவரையும் கொன்று !! தன் அப்பாவையும் உடன் அடிமைகளாக இருக்கும் அனைவரையும் காப்பாற்றுகிறார் என்பதே முடிவு.

கில்லி
என்று தாறுமாறான விறுவிறுப்பான படத்தை கொடுத்த இயக்குனர் தான் இதை இயக்கினார் என்று கூறினால் நம்ப முடியவில்லை. விஜய் இனிமேல் இதை போல் நம்ப முடியாத காட்சிகளில் நடிப்பதை நிறுத்த வேண்டும், இப்பொழுதெல்லாம் மக்கள் அதை ரசிப்பதில்லை கிண்டல் தான் செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும். இப்ப தொலைக்காட்சியில் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் தான் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அதிக குழந்தை ரசிகர்களை கொண்டுள்ள விஜய் வன்முறை காட்சிகளை குறைத்து நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

முடிவாக
குருவி எப்படி உள்ளது என்றால் விஜய் பாடல் தான் நினைவுக்கு வருகிறது "டண்டனக்க டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னா"

No comments: